ட்ரெண்டிங்

ரூபாய் 9.73 லட்சத்தை பண மோசடி செய்த பெண்கள்.... காவல்துறையினர் தீவிர விசாரணை! 

சேலம் காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 30. சேலம் மாநகரில் உள்ள அம்மாப்பேட்டையில் குழந்தைகளுக்கான அறக்கட்டளை வைத்து நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, மாது ஆகியோர் வந்துள்ளனர். 

அப்போது, பெண்களுக்கு வேலை வாய்ப்பு தரப்போவதாகவும், உதவி செய்யுமாறும் சக்திவேலிடம் கூறியுள்ளனர். இது உண்மை என்று நம்பிய சக்திவேல், சுமார் 85- க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூபாய் 9,73,800 வசூல் செய்து, அந்த பெண்களிடம் சக்திவேல் வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பெண்கள், அங்கிருந்து சென்று விட்டனர். 

இந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் மற்றும் பணத்தை வழங்கிய பெண்கள் கூட்டாக, அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று, நடந்தவற்றைக் கூறி, புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

மேலும், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.