சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 12- ஆம் வகுப்பு படித்து வரும் 18 வயது பெண்ணும், கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 இளைஞருக்கும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, சேலத்தில் உள்ள தனது காதலியைப் பார்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று தனது நண்பர் ஒருவருடன் காரில் வந்துள்ளார். காதலியின் வீட்டிற்கு அருகே காரை நிறுத்தி, அதில் இருந்து இறங்கி வெளியே வந்து நின்றுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த தெருவில் வசிக்கும் மக்கள், அந்த இரு இளைஞர்களையும் சுற்றி வளைத்து, நீங்கள் யார்? எங்கிருந்து வந்துள்ளீர்கள்? எதற்காக வந்துள்ளீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அப்போது, அந்த இளைஞர் தனது காதலியை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளதாகக் கூறினார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த இளைஞர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், சூரமங்கலம் காவல் நிலையத்தில் இளைஞர்களை ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அறிவுரைக் கூறி அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.