ட்ரெண்டிங்

வேலை தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு!

 

சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி மூன்றாம் வெள்ளிக்கிழமையான ஜனவரி 19- ஆம் தேதி அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

 

இம்முகாமில் உற்பத்தி. தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுச் செய்யவுள்ளனர்.

 

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு. பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427- 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

பணிக்காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.