ட்ரெண்டிங்

கோடி கணக்கில் மோசடி செய்த ஒரே குடும்பத்தினர்...காவல்துறை விசாரணை!

 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் பட்டியா (வயது 52). இவர் சேலம் மாநகரில் உள்ள குகை பகுதியில் ஏற்றுமதி நிறுவனத்துடன், நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2023- ஆம் ஆண்டு மார்ச் 3- ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தும் மலர் வண்ணன் (வயது 55) அவரது மனைவி பத்மா (வயது 48), மகன் கார்த்திக் (வயது 24) ஆகியோர் வியாபாரத்துக்காக சொத்து பத்திரங்களை அடகு வைத்து ராஜேஷ் பாட்டியாவின் பைனான்ஸ் நிறுவனத்திடம் 2 கோடி ரூபாய் பெற்றனர்.

 

இந்த நிலையில், ராஜேஷ் பட்டியா, கடந்த வாரம் மலர் வண்ணனிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு அவரோ வாங்கிய பணத்தைத் தர மறுத்ததுடன் மலர் வண்ணனும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, ஜனவரி 03- ஆம் தேதி அன்று அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்ற ராஜேஷ் பட்டியா மலர் வண்ணன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அன்னதானப்பட்டி காவல்துறையினர், மலர் வண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.