சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து அரசுப்போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று (ஆகஸ்ட் 04) இரவு 07.00 மணியளவில் சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ராமலிங்கபுரம் அருகே பேருந்து வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியது.
இதில் நிலைத்தடுமாறிய பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் சுமார் 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த காரிப்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். விபத்துக்குள்ளான பேருந்தையும், லாரியையும் அப்புறப்படுத்திய காவல்துறையினர், போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக, சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.